வவுனியாவின் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை சந்தை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக மறு அறிவித்தல் வரை இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளதால்,
காமினி மகாவித்தியாலய மைதானத்தில் மொத்த மரக்கறி கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறும் என உள்ளூர் விளைபொருள் மொத்த விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட்-19 தொற்று காரணமாக வவுனியா நகரப்பகுதி சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமது மொத்த விற்பனை சந்தையும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.
எனவே, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வவுனியா காமினி வித்தியாலயத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே நாளை (09.01) காலை 6 மணியிலிருந்து குறித்த மைதானத்தில் இச்செயற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது.
எனவே மக்களுக்கும் குறித்த பகுதிகளுக்கு வருகை தந்து தமக்கு தேவையான மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.