கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து பரீட்சை எழுதும் பல்கலைக்கழக மாணவர்கள்!!

669

பல்கலைக்கழக மாணவர்கள்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற 4 மாணவர்கள் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி தற்போது சிகிச்சைப் பெற்ற வரும் நிலையில் வைத்தியசாலையில் இருந்தவாறே அவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் இறுதி வருட இரண்டாம் தவணைப் பரீட்சையையே அவர்கள் இவ்வாறு எழுதி வருகின்றார்கள்.

எமது 4 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப் பராமரிப்பு நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

இந்நிலையில் எமது மாணவர்களுக்குரிய பரீட்சை 29, 30, 31, ஆகிய 3 நாட்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்குரிய நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் எடுக்கவில்லை.

ஆனால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீடம் எமது பல்கலைக் கழகத்தின் உப வேந்தரின் அனுமதியுடன் துணிந்து செயற்பட்டு, சகல வைத்திய நெறிமுறைகளையும் பின்பற்றி பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையிலிருந்த வண்ணமே பரீட்சைக்குரிய மண்டப ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு எமது 4 மாணவர்களும் தற்போது பரீட்சை எழுதிவருகின்றார்கள் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரே நேரத்திலும் கிழக்குப் பல்கலைக்கழத்திலும், பெரியகல்லாறு வைத்தியசாலையிலும் எமது மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றார்கள்.

3 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை ஒரு மணி வரையில் பரீட்சை நடைபெற்று வருகின்றது. இதற்குரிய சகல ஒழுங்குகளையும் சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள். அதனை நாங்கள் சீ.சீ.ரிவி கமரா மூலம் நாம் கண்காணித்து வருகின்றோம்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து கொண்டே பரீட்சையை எழுதுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் எவ.சி.றாகல், பதிவாளர் பகீரதன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அ.லாதாகரன்,

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மயூரன், மாவட்ட கொரோனா தடுப்பு இணைப்பாளர் வைத்திய கலாநிதி அச்சுதன், பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிறிவித்தியன், உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இந்த செயற்பாட்டைப்போல் ஏனைய பல்கலைக் கழகங்களும் பின்பற்றினால் நன்றாக அமையும், காரணம் மாணவர்களுக்கு எதுவித பயமோ, அச்சமோ இல்லாமல், அவர்கள் தமது பரீட்சையை சுயமாக எழுதுவதற்கு முடியும்.

இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் மாத்திரம் தான் இவ்வாறு தனியாகப் பரீட்சை நடாத்தப்பட்டது.

இது பல்கலைக் கழக வரலாற்றிலே இலங்கையில் முதல் தடவை நடைபெறுகின்றது எனக் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி மேலும் தெரிவித்துள்ளார்.