நாட்டின் பல இடங்களில் தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள் : செல்வந்த நாடாக மாறவுள்ள இலங்கை?

1653


செல்வந்த நாடாக மாறவுள்ள இலங்கை?



இலங்கையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒரு டொன் பாறைக்குள் 5 முதல் 10 கிராம் அளவிலான தங்கம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.



இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் சில பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கண்டறியப்பட்ட தங்கத்தின் அளவானது ஒப்பீட்டளவில் அதிகமானது.




இந்தியாவில் ஒரு டன் பாறைக்குள் 0.5 கிராம் தங்கம் கிடைக்கும் நிலையில் ஆபிரிக்காவில் ஒரு டன் பாறைக்குள் 100 கிராம் தங்கம் கிடைக்கிறது.


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கமானது ஒரு டன் பாறைக்குள் 5 முதல் 10 கிராம் அளவிலானதாக இருக்கிறது. இதேவேளை, 12,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான நிலப்பகுதியில் விலைமதிப்புள்ள பாறைகள் உள்ள வலயமும் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கியதாக இந்த வலயம் இருக்கும் நிலையில் இந்த வலயத்தில் தங்கம், செப்பு, நிக்கல், இரும்பு உள்ளிட்ட அரிய உலோகங்களும் காணப்படுகின்றன.


மாத்தளை, பதுளை, பண்டாரவளை, பலாங்கொடை, இரத்தினபுரி, எல்ல, வெல்லவாய, உசன்கொட மற்றும் சேருவாவில முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளில் சிறு அளவில் தங்கம் கிடைத்துள்ளது.

எனவே நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இலங்கை செல்வந்த நாடாக மாறும் வாய்ப்பு அதிகம் என சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-