மனைவியை கொலைசெய்து தூக்கிலிட்ட கணவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச்சம்பவம் யாழ்.இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதில் உயிரிழந்த 18 வயதேயான இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலத்தை தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை அந்த குடும்ப பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் வைத்தியசாலையில் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சிசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில் காரைக்கால் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தே நேற்று முத்தினம் குறித்த பெண்ணின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் வசீகரன் திலகா(18) என விசாரணைகள் மூலம் அறியப்பட்டுள்ளதாகவும் இதேவேளை குறித்த பெண்ணை அவரது கணவர் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரின் காவலிலுள்ளதாகவும் தாம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.