வவுனியாவில் யாசகம் செய்பவர் உறங்கியபோது அவரது சக்கர நாற்காலி திருட்டு!!

1309

யாசகம் செய்பவர்..

வவுனியாவில் ஒற்றைக் காலை இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்து யாசகம் செய்யும் நபர் ஒருவர் உறங்கிய போது அவரது சக்கர நாற்காலி திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

விபத்து ஒன்றில் ஒற்றை காலை இழந்த நபர் ஒருவர் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் யாசகம் செய்து வருகின்றார். வழமைபோல் யாசகம் செய்து விட்டு நேற்று (02.02) இரவு உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது உறங்கிய இடத்திற்கு அருகில் விட்டிருந்த சக்கர நாற்காலியை காணவில்லை.

இதனையடுத்து குறித்த நபர் அப்பகுதியில் நின்ற பொது மக்களின் உதவுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது சக்கர நாற்காலி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.