திருகோணமலை இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!!

1331

தமிழ் கல்வெட்டு..

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்ககலைகழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ப.புஸ்பரட்ணம் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் திருகோணமலை மத்திய கலாச்சார நிதியத்தின் ஆய்வு உத்தியோகத்தர்கள் தமிழ் கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கல்வெட்டு பற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியியல் பட்டதாரியான பிரசாத் நேரில் பார்வையிட்டு அந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த கல்வெட்டில் ஒரு நீண்ட கல்வெட்டின் ஒரு பகுதியை அதாவது உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அந்த கல்வெட்டுக்களில் உள்ள ஆறு வரி எழுத்துக்களை தெளிவாக வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த கல்வெட்டு அங்கிருந்து ஆலயம் ஒன்றுக்கு அது பெரும்பாலும் கோணேஸ்வரர் ஆலயம் ஆக இருக்க வேண்டும்.

அரிசி ,நெல் என்பவற்றை தானமாக வழங்கியது பற்றி கூறுகின்றது அவ்வாறு வழங்கப்பட்ட நெல் அரிசி என்பவற்றின் அளவுகள் குறியீட்டு முறையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு பற்றி மேலும் ஆய்வு செய்த தமிழகத்தில் முதன்மை கல்வெட்டு அறிஞரான சுப்பராயலு, கலாநிதி ராஜகோபால் போன்றவர்கள் இக் கல்வெட்டில் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது என அடையாளப்படுத்தியுள்ளனர்.

இதிலிருந்து இக் கல்வெட்டு சோழர் ஆட்சி முடிந்ததன் பின்னரும் கோணேஸ்வரர் ஆலயம் அங்கு வாழ்ந்த சைவர்களால் பராமரிக்கப்பட்டது ஒரு முக்கிய ஆதாரமாக காணப்படுகின்றது.

தமிழகத்தில் பக்தி இயக்கத்தை தலைமை ஏற்று நடத்திய நாயன்மார்கள் தமிழகத்தை அடுத்து முக்கியமானது சைவ ஆலயங்கள் உள்ள இடங்களாக கிழக்கிலங்கையில்கேணேஸ்வரர் ஆலயத்தையும் வட இலங்கையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தையும் போற்றிப் பாடுகின்றன.

சோழர் ஆட்சியில் பொலனறுவை தலைநகராக இருந்தாலும் அவர்களுடைய அரசியல் இராணுவ நிர்வாக பண்பாட்டு நடவடிக்கைகள் திருகோணமலையை மையப்படுத்தியே நடைபெற்றமைக்கு அதிக ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அதனால்தான் சோழர்கால உப தலைநகராக திருகோணமலையை குறிப்பிடுகின்றனர் 1070 சோழராட்சி முடிந்ததன் பின்னர் பொலநறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டாலும் அவர்களும் தொடர்ந்து இந்து ஆலயங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இப்போது கிடைத்திருக்கின்ற இந்த கல்வெட்டு சோழர் ஆட்சியின் பின்னர் திருகோணமலையில் வாழ்ந்த இந்துக்களால் கோணேஸ்வரர் ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்ததற்கு நல்ல ஒரு சான்றாகக் காணப்படுகின்றது.

16ஆம் நூற்றாண்டிலிருந்து போத்துக்கேயர் ஒல்லாந்தர் உடைய ஆட்சியில் அவர்கள் கடைப்பிடித்த கலை அழிவு கொள்கையால் பல இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றாக கோணேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது.

இதை 1964 ஆம் ஆண்டு அளவுகளில் கோணேஸ்வரர் ஆலய கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆலய அழிபாடுகள், கல்வெட்டுக்கள், விக்கிரகங்கள் உறுதி செய்கின்றன.

இந்தநிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இக்கல்வெட்டானது மேலும் போத்துக்கேயர் ஆட்சியில் கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டதற்கு ஒரு சான்றாகக் காணப்படுகின்றது.

எதிர்பாராத வகையில் மத்திய கலாச்சார நிதியத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு சூழலில் மேலும் சில கல்வெட்டுக்கள் சில கட்டட அழிபாடுகள் இருப்பதாக அறிய முடிகின்றது.

ஆகவே அந்த இடத்தில் மேலும் ஆய்வுகள் செய்வதன் மூலம் கோணேஸ்வரர் ஆலயத்தின் பழமையான வரலாற்றை அறிய கூடிய அரிய பல கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கலாம் என நம்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.

-தமிழ்வின்-