இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள் : 10 வாரங்களில் 400 பேர் வரையில் பலி!!

1908

வீதி விபத்துகள்..

2021 ஜனவரி முதல் பத்து வாரங்களுக்குள் வீதி விபத்துக்கள் காரணமாக சுமார் 400 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 2021 ஜனவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை நாடு முழுவதும் 369 ஆபத்தான விபத்துக்களில் மொத்தம் 379 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பதிவான சிறிய விபத்துக்கள் மற்றும் கடுமையான விபத்துக்களின் எண்ணிக்கை முறையே 1,939 மற்றும் 789 ஆகும்.

கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பல வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன, மார்ச் 20ம் திகதி பசறையில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்தனர். .

இதற்கிடையில், கடந்த ஆண்டில் மட்டும் 2,040 ஆபத்தான விபத்துக்களில் மொத்தம் 2,141 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்.

இதன்படி, மொத்தம் 803 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் உயிரிழந்தனர். 538 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் பலியானார்கள். மேலும், 263 பயணிகள், 196 ஓட்டுநர்கள், 159 சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 147 பின்னிருக்கை பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மொத்தம் 8,909 சிறு விபத்துக்கள் மற்றும் 6,619 கடுமையான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சேதங்களை ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கை 5,817 ஆகும்.