1250 வெளிநாட்டு புகலிட கோரிக்கையாளர்களுக்கு இலங்கையில் அடைக்கலம்!!

2595

வெளிநாடுகளில் இருந்து புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கைக்கு வந்த 1250 வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் தலையீட்டின் மூலம் இந்த வெளிநாட்டினருக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும் வரை இலங்கையில் அவர்களுக்கு தற்காலிக அரசியல் தஞ்சம் வழங்கப்படவுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈராக், மாலைத்தீவு உட்பட நாடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக இலங்கையில் புகலிடம் கோருவோருக்கு தற்காலிக புகலிடம் வழங்குதற்கு அகதிகளின் நிலை தொடர்பான ஐ.நா. மாநாட்டிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

பிற நாடுகளில் புகலிடம் கோருவோர் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியிருந்தாலும், இலங்கைக்கு வருபவர்களுக்கு நீர்கொழும்பு, கல்கிஸ்ஸ மற்றும் ஏனைய பகுதிகளில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் இந்த நாட்டில் வேலை செய்கிறார்கள் மற்றும் இலங்கை பெண்களை திருமணம் செய்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

தற்காலிக புகலிடம் கோருவோர் குறித்த தகவல்களை வழங்க ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இதற்கு முன்னர் தயக்கம் காட்டியிருந்தாலும், ஈஸ்டர் சம்பவத்திற்குப் பின்னர் இந்த குழுக்களை கண்காணிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த பகுதிகள் மாதந்தோறும் குறித்த புகலிட கோரிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் அவர்கள் தொடர்பிலான அறிக்கைகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் மனித உரிமைகளை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டும் சூழ்நிலையில் அகதிகளை இலங்கை ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.