காணாமல் போன 10 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

5137

10 வயது சிறுமி..

மீகொட, வெலிசெனவத்த பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 10 வயதான சிறுமி தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

இந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. குறித்த சிறுமியின் தந்தையும் தாயும் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் விவாகரத்து பெற்ற சிறுமியின் தாயார் மறுமணம் செய்துள்ளார்.

2020ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை இறந்துவிட்டநிலையில் சிறுமியை தந்தையின் உறவினர்கள் பராமரித்து வந்தனர். இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய சிறுமியின் தாயார் சிறுமியை தம்முடன் இங்கிலாந்து அழைத்துச்செல்ல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து சிறுமியை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையிலேயே சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பாட்டன், பாட்டி மற்றும் மாமா ஆகியோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பற்றி தகவல்களை தருமாறு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது. சிறுமியைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0112 778 911 அல்லது தேசிய சிறுவர் அதிகாரசபையின் அவசர இலக்கங்களான 1929 என்ற இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.