வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் கொரோனா பரவல் தொடர்பில் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

2125

கொரோனா பரவல் தொடர்பில்..

யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலைமைகளை அடுத்து வவுனியாவிலுள்ள வர்த்தகர்கள் நடைமுறையிலுள்ள சுகாதார முறைகளை இறுக்கமாகவும், முழுமையாகவும் பின்பற்றுமாறு வர்த்தகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது .

இது குறித்து வர்த்தகர் சங்கம் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படும் நிலைமையை அடுத்து வவுனியா நகரிற்கு வரும் பொது மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

எதிர்வரும் தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதியும், தொற்றாளர்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் நடைமுறைகளிலுள்ள சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து, கைகழுவி சமூக இடைவெளிகளை பின்பற்றுவதுடன் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் வாடிக்கையாளர்களை கைகழுவி வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நகரில் சுகாதாரத்துறையினர் பொலிசாருடன் இணைந்து வவுனியாவில் இடம்பெற்று வரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி சமூகத்தில் ஏற்படவிருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும்,

முன்னர் இடம்பெற்றதைப்போன்று வவுனியா நகரை முடக்கல் நிலைமைகளுக்குள் கொண்டு சென்று சொல்லெண்ணாத் துன்பங்களை இழப்புக்களையும் அனுபவிப்பதிலிருந்து விலகி தொற்றாளர்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்துவதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .