எரிக்கப்பட்ட நடராஜர் உருவம்..
வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தின் நடராஜர் மண்டபத்தில் நடராஜர் உருவம் எரியூட்டப்பட்மை இந்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று (11.04) சுத்தானந்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நடராஜர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் 14 மாதங்கள் பதில் தலைவராக இருந்து பொதுச்சபைக் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய செ.சபாநாதனால் நடராஜர் உருவம் பொறிக்கப்பட்ட நிலையில் ‘என் பார்வை அறிக்கையும் ஆண்டறிக்கையும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் துணைத் தலைவர் நா.தியாகராஜா மங்கள விளக்கேற்றிய தீபச் சுடரில் நடராஜர் உருவம் பொறிக்கப்பட்ட புத்தகத்தை தீயிட்டு எரித்து இந்து மதத்துக்கு அவதூறு எற்படுத்தினார்.
இது தொடர்பில் இந்து மக்கள், இளைஞர்கள் பலரும் அதிருப்தியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
அத்துடன் பொறுப்பு வாய்ந்த இந்து அமைப்பு ஒன்றின் துணைத் தலைவர் இவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட மற்றும் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் நடராஜர் உருவத்தை பொறுப்பு வாய்ந்து இந்து அமைப்பு ஒன்றின் முன்னாள் மற்றும் தற்போதைய துணைத்தலைவரான நா.தியாகராஜா எரித்தமை தவறான முன்னுதாரணம் என்பதுடன்,
ஓட்டுமொத்த இந்து மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும், இது தொடர்பில் இந்து அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன் எனவும் இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவரை உடனடியாக குறித்த சங்கத்தின் உறுப்புரிமையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.