வவுனியா சந்தையை இராணுவத்தினர் மூலம் நடாத்த வேண்டி வரும் : அரச அதிபர் எச்சரிக்கை!!

1610

அரச அதிபர் எச்சரிக்கை..

சரியான சுகாதார நடைமுறைகள் பேணப்படாவிடின் சந்தை செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்த வேண்டிவரும் என்று மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (24.04.2021) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர், சந்தை வியாபாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்தும் இங்கு வியாபாரிகள் வருகின்றனர்.

எனவே அந்த இடத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் தினச்சந்தை செயற்பாடுகளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாற்ற வேண்டி ஏற்படும்.

அங்கும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாதவிடத்து கமநல திணைக்களங்களூடாக இராணுவத்தின் உதவியை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.

எனவே உங்களது ஏனைய உறுப்பினர்களிற்கு கோவிட் தொடர்பான உண்மை நிலையினை எடுத்துச்சொல்லி உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட இடர்பாடுகளிற்கு இடமளிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.