வவுனியா ஆசிரியரின் படுகொலை தொடர்பில் நேர்மையான விசாரணை வேண்டும் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி!!

564

TNFவவுனியா ஆசிரியரின் கொலை தொடர்பில் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

வவுனியா நேரியகுளம் மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றிய கார்த்திகேசு நிரூபன் கடந்த வருடம் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தலுக்கு முதல் நாள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற போது காணாமல் போயிருந்தார்.

மார்ச் 12ம் திகதி A9 பிரதான வீதியில் 225வது மைல்கல்லுக்கும் 226 வது மைல்கல்லுக்கம் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் அவரது எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்றே தடயப் பொருட்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற கணக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் மூலை முடுக்கெங்கும் குவிந்துள்ள நிலையில் நடைபெற்றுள்ளதென்றால் அரசுக்கு தெரியாத வகையில் இக்கொலை ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது.

எனவே அதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இப்படுகொலையினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இக்கொலை தொடர்பில் சிறீலங்கா அரசு நேர்மையான விசாரணைகளை இன்றுவரை மேள்கொள்ளவில்லை. எனவே இக்கொலை தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றினை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு தெரிவிக்கின்றது.

இப்போராட்டத்தில் அனைத்து மக்களையும் பொது அமைப்புக்களையும் கலந்து கொண்டு படுகொலைக்கு நீதிகோருமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் ஆசிரியர் நிருபனின் இழப்பால் தவித்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.