
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் தாய் ஹபரணைக் காட்டுப்பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை மற்றும் ஹபரணை ஆகிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிண்ணையடியைச் சேர்ந்த திருமதி தெய்வேந்திரன் நுகேந்தா (22) என்பவரே இவ்வாறு சனிக்கிழமை அதிகாலை காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை மற்றும் ஹபரணைப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது தாய் மற்றும் குழந்தையுடன் கடந்த 08ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய மாமனாரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்று இரண்டு நாட்களில் தாயார் அவருடைய இரண்டரை வயது குழந்தையும் அழைத்துக் கொண்டு வீடு (கிண்ணையடி) திரும்பிய நிலையில் இவர் தனது மாமனாருடன் வெள்ளிக்கிழமை மாலை பஸ்ஸில் வந்துள்ளார்.
வழியில் ஹபரணைப் பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் இரவு உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்ட வேளை தான் பஸ்ஸில் இருப்பதாகக் கூறவே மாமனார் உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதனுடன் இருந்த பெண் மாமனார் உணவு உண்டுவிட்டு வந்த வேளை பஸ்ஸில் இருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பிரதேசத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் கையில் வைத்திருந்த பொதிகள் பஸ்ஸிலேயே இருந்ததாக அவருடைய மாமனார் தெரிவிக்கிறார். இந்த நிலையில் இவருடைய கணவர் சவுதி நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





