வவுனியா தெற்கு வலயத்தில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்று சித்தியில் அல்- இக்பால் ம.வி முதலிடம்!!

1699

வெளியாகிய 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்று சித்தி வீதத்தில் வவுனியா தெற்கு வலயத்தில் அல்- இக்பால் மகாவித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.

வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் சித்தி வீதம் தொடர்பில் வடமாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா தெற்கு வலயத்தில் 27 பாடசாலைகளில் இருந்து ஆயிரத்து 608 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

அதில் 936 மாணவர்களே முழுமையாக மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர்.

அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய 27 பாடசாலைகளில் தோற்றிய மாணவர்களின் சித்தி வீதத்தை அடிப்படையாக கொண்டு 93.33 சித்தி வீதத்தைப் பெற்றுள்ள சூடுவெந்தபுலவு அல்- இக்பால் மகாவித்தியாலயம் வவுனியா தெற்கு வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன்,

கந்தபுரம் வாணி வித்தியாலயம் 90 வீத சித்தியைப் பெற்று தெற்கு வலயத்தில் இரண்டாம் நிலையையும், பூவரசன்குளம் மகாவித்தியாலயம் 84.62 வீத சித்தியைப் பெற்று தெற்கு வலயத்தில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளன.

இதேவேளை, வவுனியா தெற்கு வலயத்தில் அல் இக்பால் மாகாவித்தியாலயம் மட்டுமே ஏ சித்தியுடன் வரலாறு பாடத்தில் 100 வீத சித்தியைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.