வவுனியா நகரசபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை?

1910

தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 5 வட்டாரங்களையும், புளொட் இரண்டு வட்டாரங்களையும் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனத்தை ரெலோ தனதாக்கியது.

இந்நிலையில், வவுனியா நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 5 பேரில் இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் செந்தில்ரூபன் கட்சி தாவிய நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு கிறிஸ்தோபர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஏனைய வட்டார உறுப்பினர்கள் 4 பேரும் தொடர்ந்தும் செயற்பட்டு வந்த நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிட்ட ஏனைய உறுப்பினர்களும் குறுகிய கால வாய்ப்பை வழங்கும் முகமாக வட்டார ரீதியாக வெற்றிபெற்ற 4 உறுப்பினர்களையும்,

பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், வவுனியா மாவட்ட தலைவருமான முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரியுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராலிங்கம், பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சுமந்திரன், குடியிருப்பு வட்டார உறுப்பினர் பரதலிங்கம், வைரவபுளியங்குளம் வட்டார உறுப்பினர் நா.சேனாதிராஜா,

ஆகியோரையே இவ்வாறு பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது. அவர்களது இடத்திற்கு கட்சிக்காக செயற்பட்ட புதிய உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் வட்டார ரீதியில் போட்டியிட்டு வெற்ற பெற்றவர்கள் என்ற அடிப்படையில் சில உறுப்பினர்கள் பதவி விலக விருபமில்லாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.