பெண்ணொருவரை எரித்து கொலை செய்த ஒருவருக்கு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஹிங்ரக்கொட – மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ.அன்டனி பெர்ணான்டோ என்பவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தினத்தில் வைப்பாட்டியான நவகத்தேகம – வெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான டி.எம்.சுனிதா குமாரி என்ற பெண்ணின் தலையில் மண்எண்ணெயை ஊற்றி எரித்து கொலை செய்த குற்றத்திற்காக சட்டமா அதிபர் மேற்படி நபருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சம்பவம் இடம்பெற்ற தினம் இரவு பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றதாக கூறப்படும் இருவர் சாட்சியமளித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் குற்றவாளியின் வைப்பாட்டி எனவும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இந்த கொலை நடந்துள்ளது என்று நீதிமன்றத்தில் தெரியவந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டமா அதிபர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் அந்த தண்டனை ஜனாதிபதி உத்தரவிடும் தினத்திலும் நேரத்திலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.





