21ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிப்பது தொடர்பில் ஆலோசனை!!

3927

பயணத்தடை..

தற்போது நடைமுறையில் உள்ள முழுமையான பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடிப்பது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தமாதம் 25ஆம் திகதி அமுலுக்கு வந்த பயணத் தடை நாளை 7ஆம் திகதி தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 14ஆம் திகதி தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடையாத நிலையில் நாளாந்தம் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதனால் , எதிர்வரும் 14ஆம் திகதியும் பயண தடையை தளர்த்த வேண்டாம் என பல தரப்பினரும் அரசை கோரி வருகின்றனர். அதனால் தற்போது அரச உயர் மட்டத்தில் பயண தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது.

14ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொரோனா பரவல் குறைவடையாதுள்ளதை கருத்திற் கொண்டே இந்த முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு அமலில் உள்ள காலத்திலும், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையாமல், ஆபத்தான நிலைமையை நோக்கி தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டு அமலில் உள்ள காலப் பகுதியில், மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்வதால், நாளை (07) முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மிக கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தமிழன் பத்திரிகை செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலே “பயண தடையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு ” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி, தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.