வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : நிர்வாக சபையினர் 22 பேருக்கு மட்டுமே அனுமதி!!

4768

புதூர் நாகதம்பிரான்..

வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (07.06) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றது.

400 வருடங்களுக்கு மேல் பழமையான புதுமைமிகு புதூர் நாகதம்பிரானின் அருளினைப் பெறுவதற்காகவும், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் பக்தர்கள் வருகை தந்த போதும், கொவிட் – 19 தாக்கம் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதூர் ஆலய உற்சவத்திற்கு நிர்வாகத்தினர் 22 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆலயத்திற்கு பலரும் வருகை தந்த நிலையில் புதூர் பிரதான நுழைவாயில், ஆலய முன்பகுதி நுழைவாயில் என்பவற்றில் வைத்து பொலிசாரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஆலயத்திற்கு நேர்த்திக் கடனுக்காக கொண்டு வரும் கோழி, பால் மற்றும் ஆலயத்திற்கான பொருட்களை ஆலயத்திற்குள் நுழையும் வாயில்களில் வைத்து ஆலய நிர்வாகத்தினரால் பெறப்படுவதுடன், ஆலயத்திற்கு பணம் செலுத்துபவர்களுக்கான பற்றுச் சீட்டுக்களும் வழங்கப்படுகின்றது.

அத்துடன், புதூர் நாகதம்பிரான் ஆலய விபூதி, நூல் மற்றும் விசம் தீண்டியவர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் புதூர் நாகதம்பிரான் ஆலய மண் என்பவற்றையும் ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்தின் நுழைவாயிலில் வைத்து வழங்கி வருகின்றனர்.

ஆலயத்தில் நிர்வாகத்தைச சேர்ந்த 22 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினர் 17 பேரும், பிரதேச சபை ஊழியர்கள் 7 பேரும், பொலிசார் 10 பேரும் காண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.