வவுனியா தவசிகுளத்தில் திருமணம் : மணமக்கள் உட்பட வீட்டார் தனிமைப்படுத்தல் : கலந்து கொண்டவர்களை தேடும் சுகாதாரப் பிரிவினர்!!

3750

தவசிகுளத்தில்…

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா தவசிகுளம் பகுதியில் நேற்றையதினம் (13.06.2021) இடம்பெற்ற திருமண நிகழ்வொன்று சுகாதார பிரிவினர் 15 உறவினர்களுடன் நடத்துமாறு அனுமதி வழங்கியிருந்தனர்.

எனினும் குறித்த திருமண நிகழ்விற்கு 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து நேற்றையதினம் மதியம் குறித்த திருமண வீட்டிற்கு சென்ற சுகாதார பிரிவினர் எச்சரிக்கை வழங்கியிருந்தனர்.

எனினும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறையினை மீறி செயற்பட்ட மணமக்கள் உட்பட அவரின் வீட்டார் நேற்று மாலை சுகாதார பிரிவினரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் திருமண நிகழ்வின் புகைப்படம் பிடிப்பாளரின் உதவியுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் சுயதனிமைப்படுத்தல் மேற்கொள்வதற்குறிய நடவடிக்கையும் சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் குறித்த திருமண நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.