கிழக்கு மாகாண சபையில் 3 உறுப்பினர்கள் பதவியிழப்பு!!

345

East

கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் தமது மாகாண சபை உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்று சபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எம். ஜெமீல், ஐ.தே.கவைச் சேர்ந்த தயா கமகே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேரந்த ஜே.பி.பிரியந்த பிரேமகுமார ஆகிய மூன்று பேருமே தமது மாகாண உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று உறுப்பினர்களும் தொடராக 90 நாட்களுக்குள் மாகாண சபை அமர்வுகளில் பங்குபற்றாததால் தம் உறுப்புரிமையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் சபைத் தவிசாளர் திருமதி கலப்பதி தலைமையில் மாகாண சபை அமர்வு நேற்று முன்தினம் கூடியது.

அச்சமயம் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான தயாகமகே, ஏ.எம். ஜெமில், மு.பிரியந்த பிரேமகுமார ஆகியோர் கடைசியாக சபைக் கூட்டத்திற்கு வருகை தந்து தங்களின் வரவைப் பதிவு செய்த தினங்களில் இருந்து 90 நாட்கள் கடந்த நிலையில் அதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சபையின் எந்தவொரு கூட்டத்திற்கும் சமுகம் அழிக்காமல், இருப்பதாகவும், அவர்கள் மூவரும் தங்களது வராமைக்காக சபையின் முன் அனுமதி எதனையும் பெற்றிருக்கவில்லை எனவும் கிழக்கு மாகாண சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.

1987 ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபை சட்டத்தின் பிரிவு (2) உடன் கிழக்கு மாகாண சபையின் செயன்முறை விதிக்கோவை பந்தி (65) இனை சேர்த்து வாசிக்கப்படுவதன் பிரகாரம் இம் மூன்று கிழக்கு மகாண சபை உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் வறிதாக்கப்படுவதான ஒரு பிரகடனத்தை கிழக்கு மாகாண சபையின் தவிசாளரின் பிரதிநிதியாக இச்சபைக்கு சமர்ப்பிக்கின்றேன் என சபைத் தவிசாளரின் சார்பில் இம்மூவரது விவகாரம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அமைச்சரும் மாகாண அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை சபையில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்தார்.

இந்நிலையிலையே குறித்த மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.