உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் : எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள்!!

1045

கோவிட் வைரஸ்…

மக்களிடையே இதுவரை பரவிய கோவிட் வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கோவிட் தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டன், பிரேஸில், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவில் உருமாறிய கோவிட் வைரஸூக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றமடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவி வருகின்றன. இந்த டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியது.

மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கூறுகையில், டெல்டா வகை வைரஸ்தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது. மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது.

இது பற்றிய கவலை உலகம் முழுவதும் நிலவுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் வைரஸ் வேகமாக பரவுகிறது. அதேபோல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளிலும் சமூக கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

கோவிட் பரவ பரவ அது புதிய வகையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அது வைரஸின் இயல்பு. பரவலைத் தடுப்பது மட்டுமே புதிய வகையை உருவாக்குவதை தடுக்கும். இதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் தீர்வு.

அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்ள தாமதம் செய்வதும் கூட வைரஸின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். அதேபோல உலக சுகாதார அமைப்பின் ரஸ்யாவுக்கான பிரதிநிதி மெலிடா வுஜ்னோலிக் கூறும் போது, டெல்டா வகை கோவிட் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது முகக்கவசம் அணிவது அவசியம்.

குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.