கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்துகளில் பயணித்த மூவருக்கு கொரோனா தொற்று!!

548

கொரோனா..

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பேருந்துகளில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஏறாவூர்ப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்துகளில் 49 பேர் இருந்துள்ள நிலையில் இவர்கள் அனைவருக்கும் அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களை கடந்து கொழும்பிற்கு சென்று திரும்பி வரும் வழியில் பாதுகாப்பு தரப்பினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் அல்லது பாதை அனுமதி இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கரடியனாறு கோவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் பயணித்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.