வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
1996ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, தமாகா கூட்டணியை ஆதரிக்க ரஜினிகாந்த் அதன்பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார்.
பின்னர் 2004ம் ஆண்டில் பா.ம.க.வுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்தது. கட்சி தொடங்குவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது.
அப்போது பா.ம.க.வை தோற்கடிக்க எதிர் அணியான பாரதிய ஜனதாவை வெற்றி பெற வைக்கும்படி குரல் கொடுத்த அவர், அதற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக எந்த கட்சிக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுங்கியே இருக்கிறார்.
இந்நிலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் அவரின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது, ஆனால் வரும் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பார் என்று அவரின் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.