க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுமென அறிவிப்பு!!

765

பரீட்சை முடிவு…

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கோவிட் தொற்று நிலைமை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த வருடம் மார்ச் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை நடைபெற்றது. நாடு இயல்பு நிலையில் இருந்திருந்தால் ஜூன் மாதத்தில் முடிவுகளை வெளியிட்டிருக்க முடியும்.

நாட்டில் கோவிட்டின் மூன்றாம் அலை காரணமாக ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கி, அரசு அலுவலகங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யப் பணிக்கப்பட்டனர்.

அதேவேளை, ஒரு மாத கால பயணக் கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இந்த நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமத்தை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் தொற்று நோயுடன் நாட்டின் சூழ்நிலைகள் மாறும்போது சரியான திகதியை வெளியிட முடியாதுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு 2021 ஜூலை முதல் புதிய உயர்தர வகுப்புகளைத் தொடங்க அரசு எதிர்பார்த்தது. எனினும், பரீட்சை முடிவுகள் தாமதமாகி விட்டதால் இந்த நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.