வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் : பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

3802


பி.சி.ஆர் பரிசோதனை..



வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜீவன் என்ற சிறுவன் நேற்றையதினம் (06.07.2021) காலை 8 மணியளவில் வெட்டுக் காயங்களுடன் வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.




சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை வவுனியா பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்றையதினம் சிறுவனின் குடும்பத்தினர் , சகோதரன் , சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை நேற்று மாலை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகளின் பின்னரே பிரேத பரிசோதனை இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் 14 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு : நடந்தது என்ன? விசாரணைகளில் வெளியான தகவல்!!


வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06.07.2021) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டுக்கு பின் பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமானது.

நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் உதயச்சந்திரன் சஞ்ஜிவன் கடைசி பிள்ளை இவருக்கு மூன்று அக்கா ஒர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர்.

இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன் பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும் அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை.

நேற்றையதினம் (05.07.2021) இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இன்று (06.07.2021) காலை சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் தலை தரையினை நோக்கியவாறு (பின்பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சகோதரிகள் சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்த சமயத்தில் சகோதரன் சடலத்தினை திருப்பி பார்வையிட்ட சமயத்தில் முகத்தில் காயங்களுடனும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டதுடன் சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்திருந்தார். எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் மர்மம் தொடர்கின்றது.