வவுனியா பல்கலைக்கழகம் அடுத்த 3 வருட காலப்பகுதியில் பிரதேச அபிவிருத்திக்காகவும் பாரியளவிலான பங்களிப்பை வழங்கும்!!

1273

வவுனியா பல்கலைக்கழகம்..

வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட காலப்பகுதியில் பிரதேச அபிவிருத்திக்காகவும் பாரியளவிலான பங்களிப்பை வழங்கும் என அதன் பீடாதிபதி கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது பீடாதிபதியாக இன்று (14.07) பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக செயற்பட்டு வந்த இப் பல்கலைக்கழகம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் வவுனியா பல்கலைக்கழகமாக செயற்படவுள்ளது.

அதற்கான அனுமதியை பெறுவதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள். அத்துடன் வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது பீடாதிபதியாக என்னை ஜனாதிபதி நியமித்துள்ளார். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இப்பதவிக்கு நியமித்தமைக்கு ஜனாதிபதிக்கும் நன்றிகள்.

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழமாக உயர்வதற்கு கடினமாக பாடுபட்டேன். என்னுடைய இலக்கு எனது இந்த மூன்று வருட காலப்பகுதியில் வவுனியா பல்கலைக்கழகத்தை மேன்மேலும் தரம் உயர்த்துவதுடன், பிரதேச ரீதியான அபிவிருத்திக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் பாரியளவிலான பங்களிப்பை வழங்குவோம்.

எமது பல்கலைக்கழகமானது ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது. 11 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக வருகை தந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தும் வைக்கவுள்ளார் எனத் தெரிவித்தார்.