இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

1057

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..

கோவிட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் நாட்டிற்குள் வந்த பின் முதலாவது தினத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை எனில் இலங்கையின் எந்த பாகத்திற்கும் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், சுற்றுலா மேற்கொண்டுள்ள 7ஆவது தினத்தில், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் அவர்கள் மீண்டும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வருவதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்பதற்கான ஆவணத்தையும் வைத்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.