கிராம அலுவலர்..
வவுனியாவில் கிராம அலுவலர் ஒருவர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா- தாண்டிக்குளம் A9 வீதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் சிலர் அனுமதியின்றி சுற்றுவேலி அமைத்து வியாபார நிலையங்களை அமைத்திருந்தனர்.
குறித்த காணியில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி வவுனியா பிரதேச செயலாளர் தலையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சென்று அனுமதியற்று கட்டப்பட்ட வியாபார நிலையங்களை அகற்றியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவின் கிராம அலுவலர் மீது நேற்றைய தினம் ( 15.07.2021) நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கிராம அலுவலரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கிராம அலுவலர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.