விலகியது விமானத்தின் மர்மம் : விமானியின் மனைவியிடம் எப்.பி.ஐ விசாரணை!!

303

Ahamed Sah

கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்து மூழ்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகளின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வரும் மலேசிய அதிகாரிகளின் கவனம் மீண்டும் விமானி சகாரி அகமது ஷா மீது திரும்பியது.

அவரது வீட்டில் கிடைத்துள்ள சில ஆதாரங்கள், அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன. விமானியின் வீட்டை முதலில் ஆய்வு செய்த அதிகாரிகள், விமானத்தை தரையிறக்கி மீண்டும் மேலே பறப்பது தொடர்பான பயிற்சிக்கு உரிய கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கருவியை ஆய்வு செய்தபோது, அதில் பதிவாகி இருந்த சில தகவல்கள் கடந்த பெப்ரவரி 3ம் திகதி அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே விமானம் மாயமான சம்பவத்தில் விமானிக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து மலேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கருவியில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெறுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் விமானம் கடந்த 7ம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்கு புறப்படுவதற்கு முன்னதாக விமானி சகாரி அகமது ஷா மர்ம பெண்ணிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை அதிகாரிகள் யார் கடைசியாக விமானியுடன் பேசினார்கள் என்பதை கண்டுபிடிக்க விசாரித்து வருகின்றனர் என்று செய்தி நிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து விமானத்தை விமானியே கடத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் விமானி சகாரி அகமது ஷாவின் மனைவியிடம் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ. விசாரிக்க உள்ளது. விமானியின் மனைவி பைசாக் கான் எப்.பி.ஐ. விசாரணையை எதிர்க்கொண்டுள்ளார்.

அமெரிக்கா புலனாய்வு துறையினர் மற்றும் மலேசிய பொலிஸ் அதிகாரிகள் விமானி மற்றும் அவரது மனைவியின் பின்னணி என்ன என்பதை விசாரித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.