கவனயீர்ப்பு போராட்டம்..

வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்களால் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க தாதியர் சங்கத்தினால் நாடு பூராகவும் ஒரு மணிநேர தொழிற்சங்க போராட்டம் இன்று (28.07) முன்னெடுக்கப்பட்டது.

அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் வவுனியா வைத்தியசாலை முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தாதிய உத்தியோகத்தரின் உயிராபத்தை தடுக்க என்95 மாஸ்க் வழங்கு, கொரோனா விடுதிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்ட வசதிகளை வழங்கு, வர்த்தமானி பத்திரிகையை உடனே வெளியிடு, தாதிய சேவை பதவி நிலை சேவை என சுற்று நிருபம் வெளியிடு’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

தாதியர் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என கோரிய அவர்கள் தமது நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படாதவிடத்து மேலும் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.





