வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கிராம சேவகர் சிகிச்சை பலனின்றி மரணம்!!

345

Markkandu

வவுனியா ஓமந்தைப் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கிராம சேவகரான கந்தன் மார்க்கண்டு மரணமடைந்துள்ளார் என வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

ஓமந்தை பகுதியில் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நிலையில் வீதியை கடக்க முற்பட்ட பொது பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் மயக்கமடைந்தார்.

உடனடியாக மயக்கமடைந்த கிராமசேவகர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்திய கிராம சேவகர் தலைக்கவசம் அணிந்திருந்தபோதிலும் பட்டியை இடாமையினால் விபத்தில் தலைக்கவசம் கழன்று சென்றமையினாலேயே தலையில் தாக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகரித்துவருவதும், வாகன ஓட்டிகளின் கவனமின்மையால் மரணங்கள் நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

எனவே வாகனங்களைச் செலுத்துவோர் உரிய முறையில் வீதி ஒழுங்குகளையும், வேகக் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்குமாறும் , மோட்டார் சைக்கிளை செலுத்துவோர் தலைக் கவசம் அணிந்து, தலைக் கவசத்தின் பட்டியை உரிய முறையில் பொருத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.