வவுனியாவில் விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இளம் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!

2256

வீரபுரம் உள்ளக வீதியில்..

வவுனியா வீரபுரம் உள்ளக வீதியில் இன்று (01.08.2021) மாலை நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி – இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வான் என மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அவ்விடத்தில் மக்கள் ஒன்று கூடி பதற்றமான நிலை காணப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இளம் ஊடகவியலாளரான ராஜேந்திரன் சஜீவன் மீது விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி மற்றும் வானில் பயணித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் ஊடகவியலாளரின் புகைப்பட கமராவையும் பறித்து வீசியதுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளாகிய ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் விபத்து இடம்பெற்ற இடத்தில் பொதுமக்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொண்டுள்ளனர்.

NP – ABO 6809 என்ற முச்சக்கரவண்டியில் பயணித்தவரும் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வானின் பயணித்தவருமே இவ்வாறு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.