வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து கிராமசேவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!

1140

Vavuniya11

வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து இன்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பிரதேச செயலகத்தின் செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்பாட்டமானது வவுனியா, மன்னார் வீதியில் உள்ள தாதியர் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்து பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

தமது பகுதி கிராம அலுவலர் லஞ்சம் கோருவதாகவும் பாலியல் சேட்டை புரிவதாகவும் தெரிவித்த இவ் ஆர்பாட்டக்காரர்கள், இந்தியன் வீட்டுத் திட்டம் வேண்டுமா? ரூபாய் 50,000, சிறந்த சேவையை வழங்கும் கிராம அலுவலர் எமது கிராமத்திற்கு வேண்டும், சிவபுரம் மக்களுக்கு நீதி வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒழிப்போம், அரச அதிகாரி பாலியல் லஞ்சம் கேட்பது சரியா போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலாளர் கா.உதயராசா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மேகநாதன் ஆகியோரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.