நேர்த்திக்கடன் செலுத்தியபோது 40 அடி உயர கிரேனிலிருந்து திடீரென கீழே விழுந்த இளைஞர்!!

582

ஆகாஷ்..

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு பிரசித்த பெற்ற கோவில்களில் தரிசனம் செய்ய அரசு தடை விதித்திருக்கிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், எட்றபள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த் ஆகாஷ் என்ற இளைஞர் உட்பட நான்கு நபர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கிரேன் வாகனத்தில் தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக வந்தார்கள்.

அப்போது மேட்டுப்பாளையம் பகுதியை அவர்கள் கடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி ஆகாஷ் மட்டும் கீழே விழுந்தார். தான் கீழே விழப்போகிறோம் என்று உணர்ந்த அவர் உடனே, சுதாரித்துக்கொண்டு, தண்ணீரில் விழுவது போல தரையில் குதித்தார்.

இதனால், அவருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே, கிரேனிலிருந்து மற்ற 3 பேர் கீழே இறக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நடந்து முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.