வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை கடத்த முயற்சி : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!

3196

குடும்பஸ்தர்..

கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாக வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை வான் ஒன்றில் கடத்த மேற்கொண்ட முயற்சி பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (18.08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழில் உள்ள ஒருவரிடம் ஒரு தொகைப் பணத்தை கடனாக பெற்றிருந்தார். குறித்த பணம் இது வரை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி, பிள்ளைகளுடன் வவுனியா நகர் நோக்கி காலை முச்சக்கர வண்டியில் சென்றிருந்தார்.

இதன்போது வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் குறித்த குடும்பஸ்தரை வழிமறித்த சில நபர்கள் அவரது மனைவியையும், பிள்ளையையும் அவ்விடத்தில் விட்டு விட்டு வெள்ளை வானில் ஒன்றில் குடும்பஸ்தரை ஏற்றிச் சென்றனர்.

இதன்போது வாகன இலக்கத்தை குறித்துக் கொண்ட மனைவி வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிசார் குறித்த வானையும், குடும்பஸ்தரையும், வானில் இருந்த ஆறு பேரையும் வவுனியா வெளிக்குளம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்திருந்தனர்.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.