வவுனியாவில் வீதியில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : இருவருக்கு கொரோனா தொற்று!!

3590

அன்டிஜன் பரிசோதனை..

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (21.08.2021) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (20.08) இரவு 10 மணி முதல் எதிர் வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படுபவர்கள் மீது பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகரப்பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன்,

வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர். இதனை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் நேரடியாக விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

வவுனியா நீதிமன்றம் மற்றும் புகையிரத நிலைய வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 30 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பாட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.