வவுனியாவில் தடுப்பூசிகளை முழுமையாக பெறாதவர்களே இதுவரை மரணம்!!

1849

வவுனியாவில்..

வவுனியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெறாதவர்களே இதுவரை மரணமடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (28.08) இடம்பெற்ற கோவிட் நிலமை தொடர்பான அவசர கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் கடந்த புதன்கிழமை வரை கொரோனா காரணமாக 49 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். இவ்வாறு மரணமடைந்த 49 பேரில் 37 பேர் எந்தவிதமான தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஆவர்.

12 பேர் சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் மட்டும் பெற்றுக் கொண்டவர்களாவர். தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்சுகளையும் பெற்றுக் கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் மரணமாகவில்லை.

தடுப்பூசிகளை முழுமையாக பெறுவதன் மூலம் மட்டுமே இறப்புக்களைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைவரும் தாமாக முன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.