வவுனியா பூந்தோட்டம் மின் மயானத்தில் எரியூட்டுவதற்காக வரிசையில் காத்திருக்கும் கொவிட் உடல்கள்!!

2476

பூந்தோட்டம் மின் மயானத்தில்..

வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின் மயானத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இறப்பவர்கள் மட்டுமன்றி மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்கள் வவுனியா பூந்தோட்டம் மின் மயானத்திலேயே தகனம் செய்யப்படுகின்றது.

தற்போது கொரோனா இறப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இறந்த உடல்களை எரிப்பதற்கு நேரம் தேவைப்படுவதனாலும், ஒரு உடலை எரித்து இரண்டாவது உடலை எரிப்பதற்கு குறிப்பிட நேர இடைவேளை வழங்க வேண்டி இருப்பதாலும்,

உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரிசையில் உடல்கள் எரியூட்டுவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று (28.08) மன்னாரிலிருந்து 5 உடல்கள் பூந்தோட்டம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வவுனியாவில் இருந்தும் 7 உடல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதன்போது நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது.

நகரசபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த உடல்களை எரியூட்டுவதற்காக மிக கடுமையாக வேலை செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான காலத்தில் தம்மால் இயன்றளவு உடல்களை எரியூட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அனைவருக்குமான சேவையினை வழங்கி வருகின்றோம்.

தொடர்ந்தும் அதிகளவான மரணங்கள் வவுனியாவிலும் நிகழ்ந்து வரும் நிலையில் வவுனியா மக்கள் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.