வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைபவர்களின் தகனத்திற்கான செலவை பொறுப்பேற்றுள்ள இரு இளைஞர்கள்!!

4738


வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவினை தாம் வழங்குவதாக ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர் ம.மயூரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



கோவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகரசபைக்கு சொந்தமாக பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இதன்போது சடலம் ஒன்றிக்கு 7 ஆயிரம் ரூபாய் நகரசபையால் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

குறித்த மின் மயானத்தின் தகனத்திற்கான இயந்திர திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காகவே குறித்த கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக சில குடும்பங்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.





இந்நிலையில் வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் பிரபல வர்த்தகரும், சேப்ரிகண் நிறுவன உரிமையாளருமாகிய ம.மயூரன் ஆகியோர் தாமாக முன்வந்து,


குறித்த சடலங்களை தகனம் செய்வதற்கு கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் நகரசபைக்கு தம்மால் முழுபணத்தையும் செலுத்தி தகனம் செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தகனம் செய்வதற்கு நகரசபைக்கு பணம் கட்ட முடியாதவர்கள் 0778500294 அல்லது 0773525375 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் குறித்த உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.