ஊரடங்கு சட்டத்தை மேலும் 2 வாரங்கள் நீடிக்க முக்கிய இராஜாங்க அமைச்சர் அழுத்தம்?

1297

ஊரடங்கு சட்டம்..

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் நீடிக்க முக்கிய இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி முடக்கலை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை முடக்கிய போதும் கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படவில்லை.

இதனால் முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு விதிப்பது அவசியம். நாளாந்த கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 5,000ஆக கண்டறியப்படுகிறது.

எனினும் சமூகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 நபர்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்டா திரிபு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சமூகத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-