வவுனியாவில் மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று : இருவர் மரணம்!!

2049

கொரோனா..

வவுனியாவில் மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (03.09.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். வவுனியாவின் தேக்கவத்தை மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 61 மற்றும் 76 வயதுடைய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் உடல்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் (02.09.2021) வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமி கோவில் வீதி, செட்டிகுளம், தவசிகுளம், வேப்பங்குளம், இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 46,47,60,63,83,86 வயதுடைய ஆறு பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.