சினோபார்ம்..
கொவிட் வைரஸிற்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்கள் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் அதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட சிலர் குறைந்த அளவிலான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை, சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு சற்று அதிகமாக காணப்படுவதாகவும், Pfizer, Moderna மற்றும் AstraZeneca ஆகிய தடுப்பூசிகளை செலுத்தப்பட்டவர்களுக்கு குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய் உள்ளிட்ட ஏனைய நோய் காரணிகளுக்காக சிகிச்சை பெறுபவர்கள் Sinopharm கொரோனா தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ள போதும் உரிய நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த தரப்பினருக்கு Pfizer, AstraZeneca மற்றும் Moderna ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மூன்றாவதாக வழங்கப்பட வேண்டியது அவசியமென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.