இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட பெண் கைது!!

1168


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல்வழியாக வர முயன்ற பெண்ணொருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



குறித்த பெண் கடந்த 2018ஆம் ஆண்டு விமான மூலம் சென்னைக்கு சென்றுள்ள நிலையில் விசா முடிந்த பின்னரும் இலங்கை திரும்பாமல் சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் சட்டவிரோதாக தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு – முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு வருவதற்கான இன்று அதிகாலை தனுஸ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக புறப்பட்டுள்ளார்.



அப்போது தனுஸ்கோடிக்கு அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.



இதனையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஸ்கோடிக்கு அழைத்து சென்றுள்ளனர்.


கஸ்தூரியிடம் மெரைன் பொலிஸார் முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்து பின் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்கின்றனர்.


எனவே பிடிபட்ட இலங்கை பெண் கஸ்தூரி வெளிநாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தனுஸ்கோடியில் இருந்து சட்டவிரோமாக நாட்டு படகில் அழைத்து சென்ற நபரையும் தேடி வருகின்றனர்.

கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிஸார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைகளின் பின் சந்தேகநபர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.