யாழில் கொரோனா தொற்றுடன் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாயொருவர் உயிரிழப்பு!!

1454

யாழில்..

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 4ஆம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளமையினால், அன்றைய தினம் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,அவருக்கு கோவிட்தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (8) ஆண் குழந்தை ஒன்றும் ,பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.