மாணவர்களுக்கு திட்டமிட்ட வகையில் பரீட்சைகளை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

1530

பரீட்சை..

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 60 நாட்களை கடந்தும் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இலங்கையில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர, க.பொ.த சாதாரணதர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்காக தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.

அதன்படி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2021 நவம்பர் 14ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையும், க.பொ.த சாதாரணதர பரீட்சை 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 3ஆம் திகதி வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டிருந்தன.

என்ற போதும் இவை தற்போது முன்மொழியப்பட்ட தற்காலிக திகதிகளே, நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் தற்போது கல்வி அமைச்சிற்கும்,அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்திற்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-தமிழ்வின்-