மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம் : விசேட வர்த்தமானி வெளியானது!!

1244


மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட் மொஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறி செயற்பட்டதாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதி விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் பாவனையில் இருந்ததாக கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது,



மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்குரியது என தவறாக உரிமை கோரும் கடிதம் வழங்கி, நீதிமன்றில் இருந்து உழவு இயந்திரத்தை விடுவித்து அதிகார துஸ்பிரயோகம் செய்தார் என ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.



அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய செப்ரெம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகள் வெறிதாக்கப்பட்டுள்ளது.