வவுனியாவில் கொரோனா தொற்றால் தாய் மரணம் : கொரோனா தொற்றுடன் மகன் தலைமறைவு!!

2277

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், குறித்த தாயுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது மகன் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி வீட்டில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தாய் (வயது 73) மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தாய்க்கு நோய் தாக்கம் அதிகரித்தமையால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று (14.09) மரணமடைந்துள்ளார்.

தாய் மரணமடைந்த தகவலை தெரிவித்து, குடும்பத்தினரை தகனக் கிரியைக்கு அழைப்பதற்காக பொதுசுகாதார பரிசோதகர்கள் அவர்களது தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மகன் வீட்டில் இருக்கவில்லை.

இது தொடர்பில் வீட்டில் இருந்த அவர்களது உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக வவுனியா பொலிசார் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.