வவுனியாவில் இருந்து கொரோனா தொற்றுடன் யாழ் சென்ற இளைஞனை நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு!!

1743

கொரோனா தொற்றுடன்..

தனிமைப்படுத்தல் சட்டமுறைகளை மீறி கொரோனா தொற்றுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞரை அங்கு தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கோவில்குளம் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவருக்கும், இளைஞன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு நோய் தாக்கம் அதிகரித்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்தார்.

மரணத்தையடுத்து உடலத்தை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதாரப் பிரிவினர், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது அங்கு தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞனை காணவில்லை. இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறையை மீறி கொரோனா தொற்றுடன் யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் ஊடாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கினை விசாரித்த வவுனியா நீதிமன்றம் குறித்த இளைஞனை தற்போது அவர் இருக்கும் இடத்தில் தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறும் கட்டளை பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.