வட மாகாணத்தில், 1000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க வடமாகாண சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனமும் தொழிற் பயிற்சி அதிகார சபையும் இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளன.
நான்கு மாதங்கள் கொண்ட இந்த பயிற்சி நெறியில் வீட்டு மின் இணைப்பு, மேசன் பயிற்சி, தச்சுவேலை, குழாய்பொருத்துதல் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது.இப்பயிற்சி நெறிக்காக வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் இருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் யாழ்.மாவட்டத்தில் இருந்து 225 பேர் இப்பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
மருதங்கேணி, காரைநகர், கைதடி ஆகிய இடங்களில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளதுடன் மருதங்கேணியில் 75 பேருக்கும், கரைநகரில் 50 பேருக்கும், கைதடியில் 100 பேருக்கும் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இப்பயிற்சி நெறியினைப் பெறுபவர்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் 7000 ஆயிரம் ரூபாவும் வடமாகாண சபை 3000 ஆயிரம் ரூபாவும் வழங்க இணங்கியுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளைத் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி நெறி எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும்; இதில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





